என் மீதான தாக்குதல், கோழைத்தனமான முயற்சி: டில்லி முதல்வர் ரேகா குப்தா பதில்

புதுடில்லி: "என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னை மட்டுமல்ல, எங்கள் உறுதியின் மீதான கோழைத்தனமான முயற்சி," என்று டில்லி முதல்வர் ரேகா குப்தா பதில் தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் இல்லத்தில் இன்று(ஆகஸ்ட் 20) காலை பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென ரேகா குப்தாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து,கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினார். உடனே அங்கிருந்த போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்தனர்.

இந்நிலையில் ரேகா குப்தா பதிவிட்டுள்ளதாவது:

"இன்று காலை 'ஜான் சன்வாய்' எனப்படும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் நிகழ்ச்சியில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல், என்னையும் மட்டுமல்ல, டில்லிக்கு சேவை செய்யவும் மக்களின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்ற எங்கள் உறுதியின் மீதான கோழைத்தனமான முயற்சி. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நான் அப்போது அதிர்ச்சியில் இருந்தேன், ஆனால் இப்போது நான் நன்றாக உணர்கிறேன்.

இதுபோன்ற தாக்குதல்கள் என் மன உறுதியையோ அல்லது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது உறுதியையோ ஒருபோதும் உடைத்து எரிய முடியாது. இப்போது, முன்பை விட அதிக சக்தியோடு அர்ப்பணிப்போடு நான் உங்களுடன் இருப்பேன். பொது விசாரணைகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது முன்பு போலவே அதே தீவிரத்தன்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்வேன்.

இவ்வாறு ரேகா குப்தா பதிவிட்டுள்ளார்.

Advertisement