இறைச்சிக் கடைகளால் வைகை மாசு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: மதுரை வைகை ஆற்றின் கரைகளில் உள்ள இறைச்சிக் கடைகளால் ஆறு மாசுபடுவதால், அதற்கு தடை கோரிய வழக்கில் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனு:

வைகை ஆறு கழிவுகளால் மாசடைகிறது. தடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நெல்பேட்டை அருகே வைகை ஆற்றின் கரையில் மீன், மாட்டிறைச்சி விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இதன் கழிவுகளை வைகையில் குவிப்பதால் மேலும் மாசடைகிறது. நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கழிவுகளை அகற்ற வேண்டும். அக்கடைகளை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும். வைகையின் இருபுற கரைகளில் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். மீண்டும் கடைகள் அமைப்பதை தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்தி கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கண்ணன், மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் விநாயக் ஆஜராகினர். நீதிபதிகள் மாநகராட்சி கமிஷனர், நகர் நல அலுவலர் ஆக.28 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement