'20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை'

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் பெரிய ஊர்சேரி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி தென்றல் நகரில் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.

இங்குள்ள கரட்டு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் ஆதி திராவிடர் மக்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை பாதை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் காட்டுகின்றனர்.

கவுதம்: நான்கு தெருக்களில் பாதை வசதி இல்லாததால் இங்கு மக்கள் வீடு கட்ட தயங்குகின்றனர். அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

பச்சையம்மாள் : இங்குள்ள குடிநீர் தொட்டி நிரம்பினால் வெளியேறும் உபரி நீர் இப்பகுதிக்கு விநியோகிக்கப்பட்டது. அதுவும் குடிக்க முடியாத உப்பு நீர். பல்வேறு போராட்டங்களுக்கு பின் தற்போது குடிநீர் வழங்கப்படுகிறது. மின்விளக்கு வசதியும் இல்லை.

லட்சுமி: இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பாதை கற்களாக உள்ளன, மழை நேரங்களில் சென்று வர முடியாது. காலி மனைகளில் கருவேல மரங்கள் வளர்ந்து பூச்சிகள் வசிப்பிடமாக மாறியுள்ளது . மேலும் மைதான பகுதியும் பராமரிப்பின்றி புதராக உள்ளது. எங்கள் பகுதி அருகே ஓராண்டுக்கு முன் உருவான குடியிருப்பு பகுதிக்கு சாலை, பாலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர் என்றார்.

Advertisement