கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வா? மனம் திறந்தார் முகமது ஷமி

புதுடில்லி: தொடர்ந்து இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், தான் ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலுக்கு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது ஷமியும் ஒருவர். இவர் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். காயம் காரணமாக அணியில் இருந்த விலகிய அவர், மீண்டும் அணியில் இடம் கிடைக்க முடியாமல் தவித்து வருகிறார்.
ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு, தீவிர பயிற்சியில் ஷமி ஈடுபட்டு வந்தார். ஆனால், அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்கவில்லை. இதையடுத்து, அவர் ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், ஓய்வு குறித்து வெளியான தகவல் பற்றி முகமது ஷமி முதல்முறையாக பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது; யாருக்காவது பிரச்னை இருந்தால் என்னிடம் சொல்லுங்கள். நான் ஓய்வு பெற்றால் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறும் என்றால் சொல்லுங்கள். நான் யாருடைய வாழ்க்கையில் ஒரு தடைக்கல்லாக இருக்கிறேன். எனக்கு சலிப்பு வரும் நாளில், நான் விலகிக்கொள்கிறேன். நீங்கள் என்னை தேர்வு செய்ய மாட்டீர்கள். ஆனால் நான் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பேன்.
நீங்கள் என்னை சர்வதேச போட்டிகளில் தேர்வு செய்ய மாட்டீர்கள். ஆனால், நான் உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவேன். நான் எங்காவது விளையாடிக்கொண்டே தான் இருப்பேன். உங்களுக்கு சலித்து போனது போன்ற உணர்வு வரும்போதுதான் இந்த முடிவை எடுக்க வேண்டும். அதற்கு இப்போது நேரமல்ல. 2027ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று தருவதே என்னுடைய கனவு, என்றார்.
34 வயதான முகமது ஷமி, இன்னும் இரு ஆண்டுகள் கழித்து நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்பது சந்தேகம் தான்
