நேபாளம் வழியாக ஊடுருவிய பயங்கரவாதிகள் 3 பேர்: பீஹாரில் போலீசார் உச்சகட்ட உஷார் நிலை!

17

பாட்னா: பீஹாரில் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாதிகள் 3 பேர் நேபாளம் வழியாக ஊடுருவியதால், போலீசார் உச்சகட்ட உஷார் நிலையில் உள்ளனர். இந்த மூன்று பயங்கரவாதிகளும் ஹஸ்னைன் அலி, அடில் உசேன் மற்றும் முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழிக்க ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற குழுக்களுடன் தொடர்புடைய பல பயங்கரவாத முகாம்களை பாதுகாப்பு படையினர் தாக்கினர். இந்தியத் தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சில தினங்களுக்கு முன், எந்த பயங்கரவாதியும் தப்பிக்க முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில், பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக பீஹார் மாநிலத்திற்குள் ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாதிகள் 3 பேர் நுழைந்ததாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



இந்த தகவலை அடுத்து, பீஹார் போலீசார் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளின் வரைபடத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹாவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த பயங்கரவாதிகள் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு வந்த பிறகு, பீஹாருக்குள் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக, அனைத்து ரயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியும் முழு வீச்சில் நடக்கிறது.


சன்மானம்

இவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement