ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவது நல்லதல்ல: இப்ராஹிம்

1

சிங்கம்புணரி: “மத மாற்றத்தால், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது நல்லதல்ல,” என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் உதயநிதி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மாற்று மதத்தினருக்கு ஆதரவாக பேசுவது போல் பேசி, சொந்த மதத்தவரை இழிவுபடுத்துகின்றனர். கேட்டால் மத நல்லிணக்கம் என்கின்றனர். எல்லாரையும் அரவணைத்துப் போவதுதான் மத நல்லிணக்கம்.



ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படும் மதங்களை சேர்ந்தோர், தொடர்ச்சியாக மத மாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.மத மாற்றத்தால், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவது நல்லதல்ல. ஹிந்துக்களுக்கென இருக்கும் ஒரே தேசம் பாரதம் தான்.

அதை இழந்து விடுவோமோ என்ற அச்சம் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கும், ஹிந்து மதத் தலைவர்களுக்கும் உள்ளது. அதனாலேயே, ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஹிந்து எழுச்சிக்காக, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் நடத்தப்படுகின்றன.

மற்ற மத விழாக்களுக்கு, ஹிந்துக்கள் ஒருநாளும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஆனால், ஹிந்துக்கள் மட்டும் விழாக்கள் நடத்தக்கூடாது என கூறுகின்றனர். அதை ஏற்க முடியாது.

நாட்டில், அனைவரது குரலாக ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் செயல்படுகிறது. அந்த அமைப்பின் கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement