பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

5

புதுடில்லி: பெட்ரோல் உடன் 20 சதவீதம் எத்தனால் கலப்பு செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான பொதுநல மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


@1brஎத்தனால் என்பது புதுப்பித்தக்க உயிரி எரிபொருள்; இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு 5 ஆண்டுகள் முன்னதாகவே இந்த எத்தனால் கலப்பை இந்தியா செய்து சாதனை படைத்துள்ளது. பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதால், வாகனங்களின் மைலேஜ் குறையும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.

இத்தகைய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.


இந்நிலையில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் எத்தனால் கலப்பு திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.



மனுவில், ''எத்தனால் 20 சதவீதம் பெட்ரோலில் கலப்பதன் காரணமாக வாகன இன்ஜின் பாதிக்கிறது. எத்தனால் கலப்பு இல்லாத பெட்ரோலும் வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று (செப் 01) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை வந்தது.


அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷதன் பராசத் தனது வாதங்களை முன் வைத்தார்.


மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி, ''அனைத்து விஷயங்களை கருத்தில் கொண்டு தான் அரசு பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் முடிவை எடுத்தது. இந்த முடிவு கரும்பு, மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு பெரிதும் பலன் அளிக்கும்'' என வாதிட்டார்.


அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement