ஆதார் பெற அலைக்கழிப்பு; ;கடன் வழங்குவதில்லை குறைதீர் கூட்டத்தில் முறையீடு

திண்டுக்கல் : ஆதார் பெற அலைக்கழிப்பு, கடன் வழங்கப்படுவதில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர்.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 312 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 5 முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.40,42,490 மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியத் தொகை, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காது கேட்கும் கருவி , நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்தமுருகேஸ்வரிக்கு திண்டுக்கல் மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆப்பரேட்டர் பயிற்சிக்கான ஆணையினை கலெக்டர் வழங்கினார்.டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரஇயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு கலந்து கொண்டனர்.



செந்துறை போடிக்கம்பட்டியை சேர்ந்த காவியா, கவிதா இரட்டை சகோதரி மாணவிகள் பெற்றோருடன் வந்து அளித்த மனுவில் ,நாங்கள் சித்திரைகவுண்டன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறோம். இருவருக்கும் ஆதார் அட்டை பெறுவதற்காக 9 மாதங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வருகிறோம். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. ஆதார் இல்லையெனில் எங்களால் பொதுத்தேர்வு எழுத இயலாது என பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பட்டிருந்தனர்.



பழநி புதுஆயக்குடியை பகுதி மக்கள் அளித்த மனுவில், ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு தங்க நகைக்கடன் முறையாக வழங்குவதில்லை. பயிர்க்கடன், காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கடங்கள் வழங்குவதிலும் வெளிப்படை தன்மையில்லை. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



Advertisement