சினிமாவை அச்சுறுத்தும் சமூக வலைத்தள கொள்ளையர்கள்: ஐஎப்டிபிசி காட்டம்

7

சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இந்திய திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களை வைத்துள்ள சிலர் திரைப்படத் தயாரிப்பாளர்களை விமர்சனங்கள் என்ற பெயரில் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில சங்கங்கள் இது குறித்து நீதிமன்றத்தை நாடும் நிலை வரை ஏற்பட்டது. பாரம்பரியம் மிக்க ஊடக நிறுவனங்கள் இருந்தவரையில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் திரையுலகில் வந்ததில்லை. ஆனால், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பலரும் 'பிளாக்மெயில்' செய்யும் விதமாக நடந்து கொள்வதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.

இது குறித்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சிலான ஐஎப்டிபிசி(IFTPC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,



“இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் (IFTPC), இந்தியாவில் 375-க்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களில் சிலர் திரைப்படங்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் இழிவான விமர்சனங்களை வெளியிடுகின்றனர். இதை வைத்து தயாரிப்பாளர்களிடமிருந்து மிரட்டி கொள்ளையடிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

Latest Tamil News

IFTPC மற்றும் அதன் உறுப்பினர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கின்றனர். ஆனால், சில நேர்மையற்ற நபர்களின் இந்த செயலால் இந்திய திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பொருளாதார நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து வகையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள IFTPC முடிவு செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அளவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இப்படியான சில சமூக வலைத்தள கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முடியும் என சில மூத்த தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement