இந்திய 'செமி கண்டக்டர் சிப்' உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி உறுதி

12


புதுடில்லி: ''இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்'' என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இந்தியா முதல்முறையாக செமிகண்டக்டர் சிப்களை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. இதற்கு முன்னதாக சிப்களை இந்தியா உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. மத்திய அரசின் முயற்சியால் இந்தியாவிலேயே சிப் தயாரிக்கும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று (செப் 02) டில்லியில் நடந்த செமிகண்டக்டர் தொடர்பான மாநாட்டில், இஸ்ரோவின் செமிகண்டக்டர் ஆய்வகம் தயாரித்த விக்ரம் என பெயரிடப்பட்ட 32 பிட் சிப்-ஐ மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட அதனை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: நான் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவில் தொடங்குவோம். இந்தியா அரிய கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை. செமிகண்டக்டர் திட்டங்களில் 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவை நம்புகிறது.



கடுமையான சவால்கள் இருந்த போதிலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது. 2023ம் ஆண்டில் இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement