நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயி கைது

ஓசூர்: ஓசூர் அருகே, வீட்டில் நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க, வனத்தை ஒட்டிய கிராமங்களில், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர், தாமாக முன்வந்து ஒப்படைத்தால், போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்படாது என, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஷ் சுதாகர் அறிவித்துள்ளார்.

ஆனால், வனத்தை ஒட்டிய கிராமத்தினர், நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க முன்வரவில்லை. இதனால், ஜவளகிரி வனச்சரகர் சரண்விவேக் மற்றும் வனத்துறையினர், நேற்று முன்தினம் மாடக்கல் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த விவசாயி குபேந்திரா, 38, என்பவர், தன் வீட்டின் பழைய கழிப்பறையில், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, 70 கிராம் கரி மருந்து, 105 கிராம் அலுமினிய குண்டுகளை, விலங்கு வேட்டைக்காக பயன்படுத்த பதுக்கியது தெரிந்தது.

அதை பறிமுதல் செய்த வனச்சரகர் சரண்விவேக், விவசாயி குபேந்திராவை, போலீசில் ஒப்படைத்தார். அவரை தளி போலீசார் கைது செய்தனர்.

Advertisement