அமெரிக்காவுக்கு அடுத்த அதிர்ச்சி: ஐநா பொதுச்சபை கூட்டத்தை தவிர்க்கும் பிரதமர் மோடி

28

புதுடில்லி: ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாக தெரிகிறது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்கிறார்.



ஐநா சபையில் 80வது பொதுச்சபைக் கூட்டம் செப்.9ம் தேதி நியுயார்க்கில் தொடங்குகிறது. கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்.23 முதல் செப் 29 வரை நடக்கிறது.


முதல் பாரம்பரிய பேச்சாளரான பிரேசில் தலைவர் பேச்சை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார். அவர் செப்.23ம் தேதி பேச உள்ளார்.


இந்த பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவும் பங்கேற்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பால் அந்நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. இந் நிலையில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால் அங்கு டிரம்பை சந்திக்க நேரிடும்.


வரி விதிப்பு விவகாரத்தில் இன்னமும் தீர்வு காணப்படாத தருணத்தில் பிரதமர் மோடி ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தற்போதுள்ள நிலைபாட்டின் படி அவர் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை என்பதோடு பிரதமர் மோடி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு எடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, பிரதமரின் பயணத்திட்ட அட்டவணையில் தற்போது வரை ஐநா சபை பொதுக்கூட்டம் இடம்பெறவில்லை.


பிரதமர் நியுயார்க் பயணம் மேற்கொண்டால் டிரம்புடன் இருதரப்பு சந்திப்பு நடத்த வேண்டிய சூழல் உருவாகும். தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த சந்திப்பை தவிப்பது நல்லது என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது.


எனவே,பிரதமர் மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் பிரதிநிதியாக ஐநா பொதுச் சபைக்கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துவார் என்று தெரிகிறது. விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள ஜெய்சங்கர், செப்.26ம் தேதி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement