முதல்வர் ஸ்டாலின் நாளை வருகை சூளகிரி, கிருஷ்ணகிரியில் 'ரோட்ஷோ'


ஓசூர், சூளகிரி மற்றும் கிருஷ்ணகிரியில், முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்.11) 'ரோட்ஷோ' மேற்கொள்ள உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்.11) ஓசூர் வருகிறார். பேலகொண்டப்பள்ளியிலுள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' (தால்) நிறுவனத்திற்கு காலை, 11:00 மணிக்கு தனி விமானத்தில் வருகிறார்.


11:35 முதல், 12:50 மணி வரை, ஓசூர் - தளி சாலையில் உள்ள ஆனந்த் கிரான்ட் பேலஸ் திருமண மண்டபத்தில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மதியம், 1:20 மணிக்கு, பாகலுார் சாலையில் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள அசன்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

மதியம், 2:00 முதல், மாலை, 4:00 மணி வரை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கிறார். மாலை, 4:30 மணிக்கு சூளகிரி பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வரை 'ரோட்ஷோ' செல்கிறார். மாலை, 5:00 மணிக்கு, குருபரப்பள்ளி டெல்டா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை பணியை துவக்கி வைக்கிறார். 6:00 மணிக்கு கிருஷ்ணகிரி டோல்கேட்டிலிருந்து 'ரோட்ஷோ' நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை, அமைச்சர் சக்கரபாணி தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிரகாஷ், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். முதல்வர் வருகை நிகழ்ச்சி நிரல் கடைசி நேரத்தில் மாறுதலுக்கு வாய்ப்புள்ளதாக, அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement