மாலுமியின் துப்பாக்கியை திருடிய கடற்படை வீரர் கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாலுமியின் துப்பாக்கி, தோட்டாக்களை திருடி தப்பி சென்ற கடற்படைவீரர், அவரது சகோதரர் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள நேவி நகர் குடியிருப்பு பகுதியில் இளவயது மாலுமி ஒருவர் துப்பாக்கியுடன் கடந்த 6ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவரை கடற்படை அக்னி வீரர் உடை அணிந்த ராகேஷ் டுப்புலா என்பவர் அணுகி 'நான் உங்களுக்கு பதில் காவல் பணி செய்கிறேன் நீங்கள் சற்று ஓய்வு எடுங்கள்' என கூறியுள்ளார்.
இதை நம்பி அந்த மாலுமி கொடுத்த துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்களை ராகேஷ் பையில் வைத்து மறுபுறம் நின்ற தனது சகோதரன் உமேசிடம் வீசியுள்ளார்.
பின் இருவரும் ரயிலில் தெலுங்கானாவுக்கு தப்பி சென்றனர். இது பற்றி மாலுமி அளித்த புகாரின்படி பல்வேறு சிசிடிவிக்களை ஆய்வு செய்த போலீசார் தெலுங்கானாவின் ஆசிபாபாதில் ராகேஷ் மற்றும் உமேசை பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் மும்பை அழைத்து வந்து விசாரிக்க திட்ட மிட்டுள்ளனர்.