கோவையில் சந்தேகத்துக்கு உரிய 7,000 பேரின் கைரேகை சேகரிப்பு

கோவை; கோவையில், வாகனத் தணிக்கையின் போது, சந்தேகத்துக்கு இடமான நபர்களிடம் இருந்து, எட்டு மாதங்களில், 7,000 கைரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கோவையில், குற்றச்சம்பவங்களை தடுக்க, 24 மணி நேர ரோந்து திட்டம் துவங்கப்பட்டுள்ளது. குற்றப்பின்னணி உள்ள, 900 பேரை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

குற்றங்களை தடுக்க, மாநகர போலீஸில் ஏற்கனவே இருந்த, 52 'பீட்'களை, 59 ஆக உயர்த்தியுள்ளனர். ஒரு 'பீட்'டுக்கு இரு போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.

வாகனத் தணிக்கை அதிகரிக்கப்பட்டு, சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களது கைரேகை, கருவிழி பதிவு செய்யப்படுகிறது.

எட்டு மாதங்களில், 7,000 கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை, பழைய குற்றவாளிகளின் கைரேகையுடன் ஒப்பிடும் பணி நடக்கிறது.

போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கைரேகைகளை பெற்று ஆவணப்படுத்தும் போது, நகரில் ஏதாவது ஒரு இடத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, தப்பிக்கும் நபர்களை எளிதில் அடை யாளம் காண முடியும்.

சமீபத்தில், கோவை செல்வபுரம் பகுதியில் கொலை நடந்த இடத்தில் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அதை வாகனத்தணிக்கையின்போது சேகரித்த கைரேகைகளுடன் ஒப்பிட்ட போது, குற்றவாளியை அடையாளம் கண்டு, கைது செய்ய முடிந்தது. இதேபோல், வேறு பகுதிகளில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, இங்கு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவோரையும் கண்டறிய முடியும்' என்றார்.

Advertisement