கோவில் அருகில் தர்கா ஆக்கிரமிப்பு ஹிந்து முன்னணி குற்றச்சாட்டு

1

திருப்பூர்:'தேனியில் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ள இடம் அருகில் தர்காவுக்காக இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது,' என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டி உள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

தேனி மாவட்டம், தாமரைக்குளத்தில், மலை மீது பிரசித்தி பெற்ற வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடில் அமைத்து தர்காவாக பயன்படுத்தினர்.

பின்னர், அந்த இடத்தை இஸ்லாமியர்களை புதைக்கும் இடமாக மாற்றியதோடு, சமீப காலமாக அங்கு பிறை கொடியை பறக்க விடுவது, கூட்டமாக தொழுகை நடத்துவது போன்றவை நடந்துள்ளன.

அப்பகுதி மக்கள், நில ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. கோவில் அருகில் அசைவ உணவு சாப்பிடுவது ஹிந்துக்களின் உணர்வை பாதிக்கும் என்பதை கூட அறியாமல், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் அமைதி காக்கிறது.

ஊர் மக்கள், ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வினர் போராட்டம் அறிவித்து மலையேற தயாரான போது, போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் அருகே, நில ஆக்கிரமிப்பு செய்தவர்களை விட்டு விட்டு, ஹிந்துக்களை அடக்க நினைப்பது, தி.மு.க., அரசின் சிறுபான்மையினர் மீதான பாசத்தை காண்பிக்கிறது.

வேணுகோபால் கமிஷன் பரிந்துரைப்படி, ஒரு வழிபாட்டு தலம் அருகில், இன்னொரு வழிபாட்டு தலம் அமையக்கூடாது.

ஏறத்தாழ, 600 ஆண்டு பழமை வாய்ந்த வெங்கடாஜலபதி கோவிலின் புனிதத்தை காக்க போராடியவர்களை, போலீசார் தாக்கி கைது செய்ததை ஹிந்து முன்னணி கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement