அங்கன்வாடியில் 500 பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் : முதல்வர்

புதுச்சேரி : புதிதாக 500 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2 மாதத்தில் வெளியிடப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத துவக்க விழாவில் அவர், பேசியதாவது:

மக்கள் நலமாக வாழ ஊட்டச்சத்து உணவுகள் அவசியம். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து உணவு சமமான வகையில், இருக்க வேண்டும். குழந்தை பெறும் தாய் நலமாக இருந்ததால் தான், குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக, குழந்தை பெறுவதற்கு முன் மற்றும் பின் என உதவித்தொகை கொடுத்து வருகிறோம். 6 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் எண்ணிக்கை புதுச்சேரியில் மிகவும் குறைவாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் இல்லாத நிலையில் புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அங்கன்வாடி ஊழியர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 500 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2 மாதங்களில் வெளியிடப்படும்.

முதியோர்கள் ஆரோக்கியமாக வாழ, அவர்களுக்கு தேவையான உதவித்தொகை, மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. விடுப்பட்டிருந்த 26 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வரும் 18ம் தேதி வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு பின்னர் வழங்கப்படும். சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் தடுக்க நல்ல உணவு, உடற்பயிற்சி, விளையாட்டு, மன அழுத்ததை குறைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Advertisement