நாட்டின் வளர்ச்சிக்கு வடகிழக்கு முன்னேற்றம் அவசியம்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

குவஹாத்தி: வடகிழக்கு முன்னேற்றம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

அசாம் மாநிம் குவஹாத்தியில் பூபன் ஹசாரிகாவின் 100வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவரைப்பற்றிய ஒரு புத்தகத்தையும் ரூ.100 நினைவு நாணயத்தையும் மோடி வெளியிட்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது: பூபன் ஹசாரிகாவின் 100வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க முடிந்ததில் நான் அதிர்ஷ்டசாலி. பூபன் ஹசாரிகா தனது முழு வாழ்க்கையையும் இசைக்காக அர்ப்பணித்தார்.
அவரது இசை சிறப்பு வாய்ந்தது. ஒன்றுபட்ட மற்றும் சிறந்த இந்தியாவின் தொலைநோக்கை அவர் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டு சென்றதால், மா பாரதி மீதான அவரது அபரிமிதமான அன்பு அவரது பாடல்களில் தெளிவாகத் தெரிகிறது.

பூபன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது வடகிழக்கு மாநிலத்திற்கே முழு மரியாதையாக பார்க்கப்படுகிறது.

பூபன் உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், அவரது குரல் மக்களுக்கு ஆற்றலைத் தருகிறது. அவரது பாடல்கள் இந்தியாவை ஒன்றிணைக்கின்றன. அவரது இசை 'ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்' என்ற கருத்தை உள்ளடக்கியது. அவர் இந்தியாவின் கலாசார மரபுகளில் வேரூன்றியவர்.

இந்தியாவின் கனவுகளுக்கு குரல் கொடுத்து இசையை உணர்ச்சிகளுடன் இணைத்த 'சுதாகந்தா'வின் நூற்றாண்டு விழா இது. இன்று, கிராமவாசிகள், ஏழைகள், ஆதிவாசிகள், பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் வாழ்க்கையை மேம்படுத்த இந்தியா பாடுபட்டு வருகிறது. பூபன் ஹசாரிகா இந்தியாவின் ஒற்றுமையின் நாயகன். பல தசாப்தங்களுக்கு முன்பு, வடகிழக்கு புறக்கணிக்கப்பட்டு வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தால் போராட விடப்பட்டபோது, ​​பூபன் ஒற்றுமையை ஏற்படுத்தினார்.

ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது தேசபக்தியின் உணர்வை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானின் பயங்கரவாத முயற்சிகளுக்கு இந்தியாவின் பதில் உலகம் முழுவதும் உணரப்பட்டுள்ளது. நமது நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்பதை அனைவருக்கும் காட்டினோம்,


இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement