தூத்துக்குடி கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 3 பேர் மூச்சுத்திணறி பலி

3

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இழுவைக் கப்பலில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் பழைய வஉசி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான டன் எடையுள்ள பொருட்கள் கையாளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பழைய துறைமுகத்தில் சரக்கு ஏற்றிச் செல்லும் இழுவை கப்பலின் அடிப்பகுதியில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அங்கிருந்தவர்கள் சந்தேகமடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்து அவர்கள் பார்த்த போது, தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்து கிடந்தனர்.


ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தீப் குமார், 22, புன்னக்காயலைச் சேர்ந்த ஜெனிக்ஷன் தாமஸ்,35, மற்றும் உவரியைச் சேர்ந்த ஹிரோன் ஜார்ஜ்,22,ஆகியோர் உயிரிழந்தனர்.


இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement