அதிகரிக்கும் போதைப்பொருட்கள் கடத்தல் ஐந்து ஆண்டுகளில் ஆறு மடங்கு அதிகரிப்பு: தென் மாநிலங்களில் தீவிரம்

11

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பை, குஜராத், கேரளா மற்றும் தமிழகத்தின் கடல் வழியாக போதை பொருள் கடத்தும் நடவடிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது என போதை பொருள் தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ள , 2024ம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:

நிலப்பகுதிகளை விட, கடல் பகுதியில் கண்காணிப்பு பலவீனமாக இருப்பதே போதை பொருள் கடத்தல் அதிகரிக்க காரணம்.

மெத் ஆம்பெட்டமைன் கடந்த 2020ல் 1,704 கிலோ அளவுக்கு பிடிபட்ட போதைப் பொருட்கள், 2024ல் 8,406 கிலோ அளவுக்கு சிக்கியது. அதே போல் 2019ல், ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்கள், 1,890 கிலோ கைப்பற்றப்பட்டன .

இதுவே, 2024ல் ஆறு மடங்காக அதிகரித்து 11,994 கிலோவாக இருந்தது. தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்காசிய நாடுகளில், போதைப் பொருள் சந்தை அசுர வேகத்தில் வளர்ந்து வருவதும் கடத்தல் அதிகரிக்க காரணம்.

உலகிலேயே அதிக அளவு போதைப் பொருள் தயாரிக்கும் நாடுகளுக்கு மத்தியில், இந்தியா அமைந்திருக்கிறது.

அதாவது, ஹெராயின், ஏ.டி.எஸ்., எனப்படும் அம்பெட்டமைன், மெத் ஆம்பெட்டமைன் போன்ற போதைப் பொருட்களை அதிக அளவில் தயாரிக்கும் 'டெத் கிரசன்ட்' நாடுகள் என அழைக்கப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள், நம் நாட்டின் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளன.

'டெத் டிரையங்கிள்' இன்னொரு புறம், மெத் ஆம்பெட்டமைன் மற்றும் பிற செயற்கை போதைப் பொருட்களின் முக்கியமான சப்ளையராக விளங்கும் 'டெத் டிரையங்கிள்' நாடுகளான மியான்மர், தாய்லாந்து மற்றும் லாவோஸ் நம் நாட்டின் கிழக்குப் பக்கத்தில் உள்ளன.

எனவே, நம் நாட்டின் கடல் வழியாக போதைப் பொருள் கடத்தல் முன்பை விட அதிகரித்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement