ரகாசா சூறாவளியை சமாளிக்க தயாராகும் பிலிப்பைன்ஸ், தாய்லாந்து; ஹாங்காங் ஏர்போர்ட் 36 மணிநேரம் மூடல்

ஹாங்காங்; ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹாங்காங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சூறாவளியை சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகள் தயாராகி வருகின்றன.

ஹாங்காங்கை சக்திவாய்ந்த சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளிக்கு ரகாசா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிலிப்பைன்ஸ் லுசோன் தீவில் இருந்து வடகிழக்கே 160 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. தென் சீனக்கடலில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், மேற்கு திசையில் ஹாங்காங்கை நோக்கி நகர்ந்து சீனாவின் தெற்கு கடற்கரைக்கு நகரும் என்று தெரிகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 202 முதல் 221 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிக்கு 20 கிமீ வேகத்தில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்துளது.

ரகாசா சூறாவளியானது கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், விமான நிலையத்தை தற்காலிகமாக மூடி விடலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து செப்.23 மாலை 6 மணி முதல் செப்.25 காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்து உள்ளனர்.

விரைவில், ,இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெளியிடுகின்றனர். ரகாசா புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ரகாசா சூறாவளி எதிரொலியாக, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பிலிப்பைன்ஸ், மணிலாவில் அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு இன்று (செப்.22) விடுமுறை விடப்பட்டுள்ளது. பிலிப்பைன்சின் படேன்ஸ், பாபுயன் தீவுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Advertisement