நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


தமிழகத்தில் தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையிலும், தற்போது சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள நீர் முறையாக பயன்படுத்தப்படுகிறதா எனவும், வடகிழக்கு பருவ மழையையொட்டி செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பாகவும் கல்லணையிலிருந்து, காவிரி கடலில் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் வரை நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சிவக்குமார் மற்றும் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் திலிபன் ஆகியோர் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு பகுதியில் காவிரி மற்றும் பூம்புகார் அருகே தருமகுளம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement