கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

7


கரூர்: கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடனே பிரதமர் மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் சமூக வலைதளத்தில் தமிழில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் பிரதமர் மோடி, ''தமிழகத்தின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று (செப் 28) பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement