சகோதரியை காதலித்ததால் கொன்றேன் நண்பரை கொன்ற வாலிபர் வாக்குமூலம்

சென்னை;'சகோதரியை காதலித்த ஆத்திரத்தில், கூட்டாளிகளுடன் சேர்ந்து கொன்றேன்' என, நண்பரை கொலை செய்து கூவம் ஆற்றங்கரையில் வீசிய வாலிபர் 'பகிர்' வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேத்துப்பட்டு, மேத்தா நகர் பாலம் அருகே கூவம் ஆற்றுக்கரை முட்புதரில், நேற்று முன்தினம் காலை கொளத்துாரைச் சேர்ந்த சாய்நாத், 24 என்பவர், குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில், அன்றைய நாள் காலையே, சிறுவன் உட்பட மூவர் சேத்துப்பட்டு போலீசில் சரணடைந்தனர்.

விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த அன்பரசன், 18, குள்ள பரத், 20, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

இவர்களின் நண்பரான சாய்நாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

சாய்நாத், அன்பரசனின் சகோதரியை காதலித்துள்ளார். இதையறிந்த அன்பரசன் பலமுறை எச்சரித்தும், தொடர்ந்து, அன்பரசனின் சகோதரியுடன் பழகி வந்துஉள்ளார். ஆத்திரமடைந்த அன்பரசன், இரண்டு மாதங்களுக்கு முன், சாய்நாத்தை கத்தியால் தாக்கி மிரட்டியுள்ளார்.

இருப்பினும், சகோதரியுடன் பழகுவதை தவிர்க்காமல் இருந்தாக தெரிகிறது. அந்த ஆத்திரத்தில், சாய்நாத்தை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து, கூவம் ஆற்றில் வீசியதாக அன்பரசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைக்கு பின், அன்பரசன், குள்ள பரத் ஆகியோரை சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை சிறார் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

Advertisement