காஞ்சியில் செயல்படும் மின்வாரிய அலுவலகம் செங்கைக்கு மாற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் தாலுகா கிராமங்களை உள்ளடக்கிய மின் வாரிய அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நெல்வாய் பகுதியில் செயல்படுவதால், நுகர்வோர் சிரமப்படுகின்றனர். எனவே, அந்த அலுவலகத்தை செங்கல்பட்டு பகுதிக்கு மாற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ள நெல்வாய் பகுதியில், துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்வாய், நெல்வாய் கூட்ரோடு, கரிக்கிலி, சித்தாமூர் கொளத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நுகர்வோர், பல்வேறு தேவைகளுக்காக இந்த துணை மின் நிலையத்திற்கு செல்கின்றனர்.

விவசாய பயன்பாட்டிற்கான மும்முனை மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட மக்கள், உத்திரமேரூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களுக்கு அலைய வேண்டியுள்ளது.

அந்த வகையில், மதுராந்தகம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் நெல்வாய் பகுதிக்கும், அங்கிருந்து 38 கி.மீ., துாரத்தில் உள்ள காஞ்சிபுரத்திற்கு அலைகின்றனர்.

இதனால் வீண் அலைச்சல் மற்றும் அதிக செலவு ஏற்படுவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட இக்கிராமங்களை உள்ளடக்கிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களை, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றி அமைக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

@block_B@ மாற்ற வேண்டியது அவசியம் இதுகுறித்து, மதுராந்தகம் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பின், உத்திரமேரூர் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் இருந்த கிராமங்கள், படாளம் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டன. அதே போன்று, மின்சாரத் துறையையும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.block_B

Advertisement