கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது

ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா டேனிஷ்பேட்டை, கணவாய்புதுார், கே.மோரூர், ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு வாரங்களாக மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால், டேனிஷ்பேட்டை உள்கோம்பையில் உருவாகும், மேற்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் வந்த மழைநீர் டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் வழியாக வந்து, டேனிஷ்பேட்டை ஏரியை நிரப்பியது.

அதிலிருந்து வெளியேறிய உபரி நீர் சிறிது துாரத்தில், பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள, கோட்டைகுள்ளமுடையான் ஏரிக்கு சென்றது. கடந்த இரு நாட்களாக தொடர்ந்து வந்த வெள்ள நீரால், நேற்று முன்தினம் ஏரி நிரம்பி கோடி விழுந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று கோடிவிழுந்த இடத்தில் துணிகளை துவைத்தும், குளித்தும், வானங்களை கழுவியும் மகிழ்ந்தனர். இதிலிருந்து வெளியேறும் உபரிநீர், பண்ணப்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயில் செல்கிறது. இதனால் கால்வாயில் இருந்த அடைப்புகளை அகற்றும் பணியை, நேற்று பொதுப்
பணித்துறையினர் மேற்கொண்டனர்.

Advertisement