அமைதியை ஆயுதங்களால் சீர்குலைத்தால் தகுந்த பதிலடி; நக்சலைட்டுகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

2


ராய்ப்பூர்: "அமைதியை ஆயுதங்களால் சீர்குலைப் பவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்," என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.


சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரில் நடந்த நிகழ்ச்சியில், அமித்ஷா பேசியதாவது: சத்தீஸ்கர் மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும், வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளன என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.


அமைதியை ஆயுதங்களால் சீர்குலைப்பவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். நக்சலைட்டுகள் சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அரசால் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.


நக்சலைட்டுகள் அனைவரும் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வந்து சரண் அடைய வேண்டும். இன்று, மின்சாரம், குடிநீர், சாலைகள், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள், ரூ.5 லட்சம் வரை சுகாதார காப்பீடு, 5 கிலோ இலவச அரிசி போன்றவை இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளன.


மாநிலத்தில் பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் பாஜ அரசு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி உள்ளது. நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வர 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சத்தீஸ்கரின் வளர்ச்சியை அடுத்தாண்டு மார்ச் 31க்கு பிறகு நக்சலைட்டுகளால் தடுக்க முடியாது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement