தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும்… இருமல் மருந்து விற்பனைக்குத் தடை

திருவனந்தபுரம்: வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்ததில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தைப் போல கேரளாவிலும் சம்பந்தப்பட்ட இருமல் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ம.பி.,யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட , 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன. இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகத்தில் விற்பனை செய்ய தடை மருந்து கட்டுப்பாடு இயக்ககம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழகத்தைப் போலவே, கோல்ட்ரிப் இருமல் மருந்தை விற்பனை செய்ய கேரள அரசும் தடை விதித்துள்ளது.

இது குறித்து கேரள சுகாதாரத்துறை வீணா ஜார்ஜ் அமைச்சர் கூறுகையில், "பிற மாநிலங்களைப் போல கேரளாவிலும் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, மருந்து கட்டுப்பாட்டாளர் கோல்ட்ரிப் மருந்தின் விநியோகம் மற்றும் விற்பனையை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்," இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement