பேட்டரி சேமிப்பு மையங்களுக்கு அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில், தீ விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், எரிசக்தி சேமிப்பு திட்டங்களுக்கு உள்ளூர் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் மின் தேவைக்கான பேட்டரி சேமிப்பு திட்டங்களுக்கு உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு முக்கிய காரணம்,

இத்திட்டங்களுக்கு லித்தியம் - அயன் பேட்டரிகளை பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதால், பேட்டரிகளில் தீ விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

சமீபத்தில், கலிபோர்னியாவில் உள்ள மாஸ் லேண்டிங் போன்ற பெரிய சேமிப்பு மையங்களில் ஏற்பட்ட தீ விபத்தால் வெளியான நச்சு புகையினால், மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பேட்டரிகளில் ஏற்படும் தொடர் வெப்பத்தால் தீ விபத்து ஏற்படும் என்றும், விபத்தில் வெளியிடப்படும் நச்சுப் புகை மற்றும் வாயுக்களால் உடல்நல கோளாறுகள் ஏற்படும் என்றும் உள்ளூர் மக்களிடையே பீதி நிலவுகிறது.

இதையடுத்து, நியூயார்க் போன்ற மாகாணங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், இத்தகைய பெரிய பேட்டரி சேமிப்பு மையங்களை அமைப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

லித்தியம் - அயன் பேட்டரிகள் தீப்பற்றினால் அணைப்பது மிகவும் கடினம் என கூறப்படுகிறது. அவை நீண்ட நேரம் எரியும் தன்மை கொண்டது; அணைந்த பின்னரும் மீண்டும் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை.

ஆனால், எரிசக்தி சேமிப்பு திட்டங்களின் ஆதரவாளர்கள், நவீன அமைப்புகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தீ பரவாமல் தடுக்க போதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மக்களிடையே பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளதால், உள்ளுர் அளவில் எதிர்ப்பு வலுத்து, புதிய திட்டங்களை நிறுவுவதில் தாமதம் ஏற்படுகிறது-.

Advertisement