மஹா தீப நெய்குட காணிக்கை கவுன்டர் அருணாசலேஸ்வரர் கோவிலில் திறப்பு

திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப நெய்குட காணிக்கை கவுன்டர் நேற்று திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், நவ., 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் விழா நடக்கும். இதில் டிச., 3ல், கோவில் கருவறை எதிரில் அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்படும் விழா நடக்கும், 10 நாட்களும், காலை, இரவு சுவாமி வீதி உலா வெவ்வேறு வாகனங்களில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
விழாவில், 7ம் நாளில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கும். விழா பூர்வாங்க பணிகள் தொடங்க கடந்த, 24ம் தேதி, கோவில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது.
இதை தொடர்ந்து, தீப திருவிழாவில் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். பக்தர்கள் நேர்த்திக்கடனாக நெய் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று முதல், நெய் காணிக்கை பக்தர்கள் செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில் கவுன்டர் திறக்கப்பட்டது. இதை கோவில் இணை ஆணையர் பரணிதரன் திறந்து வைத்தார். நெய் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் ஒரு கிலோ, 250 ரூபாய், அரை கிலோ, 150 ரூபாய், கால்கிலோ, 80 ரூபாய் கவுன்டரில் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
கடந்தாண்டு நெய் காணிக்கையாக பக்தர்கள், 2.15 கோடி ரூபாய் செலுத்தியிருந்தனர். இந்த ஆண்டு, 2.50 கோடி ரூபாய் நெய் காணிக்கையாக வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement