டூவீலர்களில் வெடிகுண்டு வெடிப்பது போல் சத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

திருவாடானை; டூவீலர்களில் வெடிகுண்டு வெடிப்பது போல் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தத்துடன் செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் போன்ற பல ஊர்களில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் சைலன்சரை மாற்றியமைத்து ஓட்டுவதால் அதிக சத்தம் எழுகிறது.

சில இளைஞர்கள் வேண்டுமென்றே பல முறை ஒரே ரோட்டில் அங்கும், இங்குமாக அதிக சத்தத்துடன் டூவீலர் ஓட்டுவதால் பிற வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது.

சில டூவீலர்களில் டமார் என வெடிகுண்டு வெடிப்பது போன்று சத்தமும், நாய் குரைப்பது, குழந்தை அழுவது, ஆம்புலன்ஸ் போன்ற சத்தங்களை ஹாரனாக வைத்து ஓட்டு கின்றனர்.

இதனால் பெரும் பாதிப்பாக உள்ளது. பள்ளிகள், மருத்துவமனை வழியாக செல்லும் போது உடல் நல குறைவுடன் இருப்பவர்கள் டூவீலரின் பயங்கர சத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதே போன்று இதய நோய் உள்ளவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாணவர்களுக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது. வீடுகளில் துாங்கி கொண்டிருப்போர் பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சியடைகின்றனர்.

அதிக சத்தத்துடன் டூவீலர் ஓட்டுபவர்களிடம் இருந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement