கோவை - சென்னை 'வந்தே பாரத்'தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

திருப்பூர் : கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டுமென பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம், 2023 ஏப்ரல், 9ல் துவங்கியது.

வாரத்தில் புதன்கிழமை தவிர, ஆறு நாட்கள் ரயில் இயக்கப்படுகிறது. காலை, 6:00 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 11:50க்கு சென்னை சென்றடையும். பின், மதியம் 2:15க்கு சென்னையில் புறப்பட்டு, இரவு 8:15க்கு கோவை வந்தடைகிறது.

ரயிலில் மொத்தம், 598 இடங்கள் உள்ளன. கோவை - சென்னை, எக்ஸிகியூட்டிவ் கட்டணம் பயணி ஒருவருக்கு, 2,310 ரூபாய், ஏசி சேர் கார் கட்டணம், 1,215 ரூபாயாக உள்ளது. ரயில், சேலம் - சென்னை இடையே எந்த ஸ்டேஷனிலும் நிற்பதில்லை.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ரயில் டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வருவதால், எட்டு பெட்டிகளுடன் இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலை, 16 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் டிக்கெட் முன்பதிவு, வருவாய், பயணியர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே ரயில் பெட்டி களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.

'கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது; விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிடும்' என்றனர்.

Advertisement