கொப்பாலில் மணல் கடத்தல் விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

கொப்பால்: மணல் கடத்தல் தொடர்பாக, முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சில தகவல்களை சேகரிக்கும்படி முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் நிதி ஆலோசகர் பசவராஜ் ராயரெட்டி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் 'கொப்பால் மாவட்ட சுரங்கம், நில ஆய்வியல் துறையில் பெரும் ஊழல் நடக்கிறது. துங்கபத்ரா ஆற்றில் இருந்து தினமும், 100 முதல் 150 லோடு மணல், வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது.

இதை தடுக்க வேண்டிய சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகளே, மணல் கடத்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.

இவர்கள் பல ஆண்டுகளாக, இதே துறையில் இருந்து ஊழலில் ஈடுபடுகின்றனர்.

இவர்களை இடமாற்றுவதுடன், மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர் கூறியிருந்தார்.

இவரது குற்றச்சாட்டை அதிகாரிகள் மறுத்தனர். மணல் கடத்தல் குறித்து, முதல்வரின் நிதி ஆலோசகரே குரல் எழுப்பியதால், முதல்வர் சித்தராமையா நடவடிக்கையில் இறங்கினார்.

மணல் கடத்தலுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் அதிகாரிகள், பல ஆண்டுகளாக சுரங்கம், நில ஆய்வியல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பற்றிய தகவலை சேகரிக்கும்படி, தன் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளும், கொப்பாலின் சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement