விழுப்புரம் மாவட்டத்தில் 10 செ.மீ., மழை : 10 வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் 10 கூரை வீடுகள் சேதமாகின; 2 மாடுகள் இறந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நேற்று 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியிலிருந்து பலத்த மழை கொட்டியது. காலை 8.00 மணி வரை இந்த மழை தொடர்ந்தது.

இதனால், வானுாரில் 18 செ.மீ, விழுப்புரம், வல்லத்தில் 17 செ.மீ, செஞ்சியில் 12 செ.மீ, நேமூரில் 10.5 செ.மீ, திண்டிவனம், சூரப்பட்டில் 10.3 செ.மீ, அளவில் மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 10 செ.மீ., பதிவானது.

விழுப்புரம் புதிய பஸ் ஸ்டாண்டில் மழை நீர் வெளியேற வழியின்றி நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி, ஏரி போல் காட்சியளித்தது. இதனால், பஸ்கள் இயக்குவது பாதிக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் 10 குடிசை வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 2 மாடுகள் இறந்தன. 10 மின் கம்பங்கள் உடைந்தன. 7 மின்கம்பங்கள் சாய்ந்தன. 22 மரங்கள், சாலையில் விழுந்தன.

வானூர் அருகே ஆண்பாக்கம் கொடூர் பகுதியில் தரைப்பாலம் மூழ்கியதால், அங்குள்ள வீடுகளில் இருந்து 20 பேர் மீட்கப்பட்டு, மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில், பல்வேறு தேங்கிய மழைநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டது. பொதுப்பணி, வருவாய், நெடுஞ்சாலை, மின்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு அதிகாரி ராமன், கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் ஆகியோர் ஆய்வு செய்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

Advertisement