இந்தியாவின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம்: நவ.,24ல் பதவியேற்பு

7

புதுடில்லி: இந்தியாவின் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் நவ.,24 ல் பதவியேற்க உள்ளார்.


சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய், நவ., 24 ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க பி.ஆர்.கவாய் பரிந்துரை செய்து இருந்தார்.


இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் நவ.,24ல் பதவியேற்க உள்ளார்.

யார் இவர்





*சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான சூர்யகாந்த், கடந்த 1962ம் ஆண்டு பிப்.,10 ல் ஹரியானா மாநிலம் ஹிசார் நகரில் பிறந்தவர்.

*ஹிசாரில் கல்லூரியில் 1981ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு முடித்தார்.

*1984 ல் ரோதக் நகரில் உள்ள மஹரிஷி தயானந்த் பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தார்.

*அதே ஆண்டு ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

* தொடர்ந்து 1985 ல் பஞ்சாப் மற்றும் சண்டிஹர் ஐகோர்ட்டில் பணி தொடர்ந்தார்.

*2000 ம் ஆண்டு ஹரியானாவின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

*2004 ம் ஆண்டு ஜன.,9 ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

*2018 ல் ஹிமாச்சலபிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். 2019 ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

*வரும் நவ.,24 ல் தலைமை நீதிபதியாக பதவியேற்கும் அவர், 2027 பிப்.,9 வரை பதவி வகிப்பார்.

Advertisement