திமுகவின் கபட நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை: விஜய்

5

சென்னை: திமுகவின் கபட நாடகத்தை மக்கள் தயாராக இல்லை என நடிகரும், தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பீஹார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தவெக சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம். வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

திசை திருப்ப...!



புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும். சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் திமுக.. இதுகுறித்துச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும்.


அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று திமுக நினைக்கிறதா? இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தவெக எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழக மக்கள் அனைவரும் அறிவர்.

கருத்தரங்கம்



ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது மத்திய பாஜ அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் தவெக எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும். சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தவெக சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். மாநில, மாவட்ட, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர். மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தவெக உறுதியாக நிற்கும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

Advertisement