பீஹார் குளத்தில் மீன்பிடித்த ராகுல்: தேர்தல் பிரசாரத்தில் விறுவிறுப்பு

46

பாட்னா: பீஹாரில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.

தீவிர பிரசாரம்




பீஹார் சட்டசபைக்கு நவ., 6 மற்றும் 11 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்டோர் ஆளும் தேஜ கூட்டணிக்கு ஆதரவாக தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



Tamil News
Tamil News
அதேபோல் எதிர்க்கட்சி கூட்டணியான மஹாகட்பந்தனுக்கு ஆதரவாக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸ் எம்பி ராகுல், அவரது சகோதரி பிரியங்கா மற்றும் கூட்டணி கட்சியினரும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மறு நாளுடன் முடிவடைவதால் தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

குளத்தில்



பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அங்குள்ள குளம் ஒன்றில் மீனவர்கள் வலைபோட்டு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் பகுதிக்கு படகில் சென்ற ராகுல், திடீரென குளத்தில் குதித்தார். மீனவர்களுடன் சென்று வலையை பிடித்து மீன்பிடிக்க துவங்கினார். பிறகு அவர்களுடன் சேர்ந்து ராகுலும் மீன்களுடன் கரையேறினார். அவர்களுடன் துணை முதல்வர் வேட்பாளர் முகேஷ் சஹானி, மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர் கன்னையா குமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

அனைவருக்குமான அரசு



முன்னதாக அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: 'ஆப்பரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டும் என டிரம்ப் கூறியதும், பிரதமர் மோடி பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தினார். ஆனால், 1971ல் இந்திரா பிரதமராக இருந்த போது அமெரிக்கா மிரட்டிய போதும் பயப்படவில்லை.

சிறு வணிகர்கள் பாதிக்கப்படும் வகையிலும், பெரிய முதலாளிகள் லாபம் அடையும் வகையில் மட்டுமே, ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு வாபஸ் போன்ற நடவடிக்கைகளை பாஜ அரசு எடுத்தது.ஆனால், எங்களது அணுகுமுறை வேறு. சிறுவணிகர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மொபைல்போனில் உள்ள மேட் இன் சீனா என்ற வாசகம், மேட் இன் பீஹார் என மாற வேண்டும்.

இணைய கட்டணத்தை குறைத்துவிட்டோம். அதனால், சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பார்க்க முடிகிறது. ரீல்ஸ் எடுக்க முடிகிறது என மோடி கூறுகிறார். நீங்கள் ரீல்ஸ் பார்ப்பதால், பணம் அனைத்தும் கோடீஸ்வரர்களுக்கு செல்கிறது. 'இண்டி' கூட்டணி ஆட்சி அமைத்தால், நாங்கள் குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும் அல்லாமல், அனைத்து தரப்புக்குமான அரசாக இருக்கும்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement