அனில் அம்பானியின் ரூ.7 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்

12

புதுடில்லி: பணமோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.



விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவரது வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.


அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.


இந்த வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி இருந்தனர்.


இந்நிலையில் இன்று (நவ., 03) அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதில் அனில் அம்பானியின் பாந்த்ரா இல்லம், வீட்டு மனை, டில்லி, நொய்டா, மும்பை, கோவா, புனே, சென்னையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேசன் அலுவலகங்கள் உள்ளிட்டவை அடங்கும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் இந்த வழக்கில் நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி அறிவு நகருக்கு சொந்தமான 132 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ.4,462 கோடியாகும். இதுவரை மோசடி வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.7,500 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement