வடலுார் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது... எப்போது?; கடைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் தாமதம்

கடலுார்: வடலுார் நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட, 118 கடைகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்து வடலுார் நகராட்சி உள்ளது. குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடலுார், பார்வதிபுரம், சேராக்குப்பம் மற்றும் ஆபத்தாரணபுரம் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.

படிப்படியாக தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து வருவாயையும், மக்கள் தொகையையும் அடிப்படையாக கொண்டு கடந்த, 2021ம் ஆண்டு, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

வடலுாருக்கு பெருமை சேர்க்கும் வள்ளலாரின் சத்திய ஞான சபையும், சத்திய தருமசாலையும் உள்ளது. இது உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் மையமாக உள்ளது. வடலுார் நகராட்சியில் 16 ஆயிரத்து 909 ஆண் வாக்காளர்களும், 17 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 7 பேரும் என மொத்தம் 34 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர்.

வடலுார் பேரூராட்சியாக இருந்த போது, 18 வார்டுகள் மட்டுமே இருந்தன. பின்னர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும், 27 வார்டுகளாக அதிகரித்தது. இந்த நகராட்சி, போக்குவரத்திற்கு ஏற்றார் போல் மையத்தில் அமைந்துள்ளது. சென்னை, தஞ்சாவூர், புதுச்சேரி, சேலம், கோவை, ஈரோடு ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாகவும் உள்ளது.

வடலுார், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் வருவாயை பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் புதிய பஸ் நிலையம் முக்கியமானது. இந்த பஸ் நிலையத்தை சுற்றிலும் வடலுார் முக்கிய பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த பஸ் நிலையம், மொத்தம் 6.95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தரைதளம், முதல் தளம், என 110 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் தாய்மார்களுக்கு பாலுாட்டும் அறை, கேன்டீன், ஊழியர்கள் ஓய்வறை போன்றவைகளும் உள்ளன.

ஏற்கனவே நகராட்சி கடைகளில் வியாபாரம் செய்திருந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் கடைகளை மாற்றி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடைகள் ஏலம் விட்டதில் தரைதளத்தில் உள்ள, 50 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற கடைகள் அதிகளவு டிபாசிட் தொகை, போடப்பட்டுள்ளதாக கூறி, ஏலம் கேட்கப்படவில்லை.

மாடியில் உள்ள கடைகள் ஏலம் போகாததால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடைகளுக்கு மின் மற்றும் தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிய பஸ் நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement