'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் ரூ.1000கோடி மதிப்பில் உதவிகள்; முதல்வர் பெருமிதம்

சென்னை: 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;

ஆயிரம் கோடியைத் தொட்டது நம்மஸ்கூல் நம்மஊரு பள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி.

இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக் கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்.

நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் மற்றும் 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள்.

இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் மகேஸ், நம்ம ஊரு நம்ம பள்ளி அறக்கட்டளைத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement