தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? விஜய் கேள்வி

3

சென்னை: கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சம் பதறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே?'', என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவையில் விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு காரில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் 3 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எங்கே? பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு எங்கே? தொடர்ந்து துன்பம் நேர்கிறது. தமிழக முதல்வர் துயில் களைவது எப்போது?


கோவை மாணவிக்குக் கொடுமை விளைவித்த குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்துச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Advertisement