தர்மபுரி புதிய பஸ் ஸ்டாண்ட் பணி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தர்மபுரி, தர்மபுரியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா கட்டுமான பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி தி.மு.க., -எம்.பி., மணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று, தர்மபுரிக்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்தபின், தர்மபுரி அருகே, சோகத்துார் பஞ்.,க்கு உட்பட்ட ஏ.ரெட்டிஹள்ளி கிராமத்தில், 10 ஏக்கர் பரப்பளவில், 39.14 கோடி ரூபாய் மதிப்பில் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடந்து வரும், தர்மபுரி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தடங்கத்திலுள்ள, சிப்காட் தொழிற்பூங்காவிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், இங்கு நடந்து வரும், அலுவலக கட்டடம், சிறு பாலங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், தர்மபுரி தாலுகாவில் அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி தாலுகாவில் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம், 1,733 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி 2024 நவ., 4 அன்று பெறப்பட்ட நிலையில், கடந்த ஆக., 17 அன்று தர்மபுரி சிப்காட் தொழிற்பூங்கா முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின் போது, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், தர்மபுரி கலெக்டர் சதீஸ், நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெட்டி, சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement