அரசியலமைப்பைக் காப்பாற்றுவது இளைஞர்களின் பொறுப்பு; விழிப்புடன் இருக்க சொல்கிறார் ராகுல்

2

பாட்னா: தேஜ கூட்டணி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் ஓட்டு திருட்டு செய்வதில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீஹார் இளைஞர்களின் பொறுப்பு. வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும்
விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், காங்., எம்.பி.யுமான ராகுல் தெரிவித்து உள்ளார்.


பீஹாரின் பூர்னியாவில் நடந்த, தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: பீஹாரில் ஓட்டு திருட்டு செய்வதை நிறுத்தி அரசியலமைப்பைக் காப்பாற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் மாநில இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றியுள்ளார்.
பாஜவும், தேர்தல் கமிஷனும் ஹரியானா தேர்தலில் ஓட்டுக்களை திருடிவிட்டன என்பதை நாங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளோம். அவர்கள் பீஹாரில் ஓட்டுக்களை திருட முயற்சிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


தேஜ கூட்டணி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்கள் ஓட்டு திருட்டு செய்வதில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, அரசியலமைப்பைக் காப்பாற்றுவது பீஹார் இளைஞர்களின் பொறுப்பு. வாக்குச் சாவடிகளில் நீங்கள் அனைவரும்
விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.


பீஹார் மீண்டும் முன்னேற வேண்டும். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவமனைகள் பீஹாரில் நிறுவப்பட வேண்டும். உலகளாவிய சுற்றுலா மற்றும் தொழில்துறை மையமாக மாற வேண்டும். ஆனால் பிரதமர் மோடி மற்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் இதைச் செய்ய முடியாது. நிதிஷ் குமார் பிரதமர் மோடியால் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் அவரால் எதுவும் செய்ய முடியாது. பீஹார் அரசு நிதிஷ் குமாரால் நடத்தப்படவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement