தெருநாய்கள் விவகாரம்; வேலி அமையுங்கள், கண்காணியுங்கள்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

21


புதுடில்லி: ''அரசு கட்டடம், மருத்துவமனை, ரயில் நிலையங்களில் தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வு இன்று (நவ.,07) பிறப்பித்துள்ள உத்தரவு:

* மருத்துவமனைகள் விளையாட்டு வளாகங்கள் ரயில் நிலையங்கள் பள்ளி அருகே என அனைத்து இடங்களிலும் இருந்து உடனடியாக தெரு நாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.



* பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாமல் கண்காணித்து தடுக்க வேண்டும்.
* தெருநாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்தியதற்கு பிறகு பிடிக்கப்பட்ட இடத்திலேயே விடக்கூடாது. அவற்றை முறையான தங்குமிடத்தில் மாற்ற வேண்டும்.

* சாலைகளில் திரியும் கால்நடைகளை கண்காணித்து புகார் அளிக்க குழு அமைக்க வேண்டும்.



* இந்த புதிய உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்.


* இந்த உத்தரவுகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் 8 வாரங்களில் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெருநாய் பிரச்னை வழக்கு பின்னணி?



* தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, இது தொடர்பாக கடந்த ஆக., 11ல் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. டில்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுற்றித்திரியும், தெருநாய்களை பிடித்து உடனடியாக காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.



* இது தொடர்பாக, சமூக ஆர்வலர்கள் பலர், உச்ச நீதிமன்றத்தில் புதிதாக தாக்கல் செய்த மனுக்கள், ஆக., 22ல் விசாரணைக்கு வந்தன. அப்போது, தெருநாய்க்கடி சம்பவத்தை சமாளிப்பது தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்தும் விளக்கம் அளிக்க, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


* தெருநாய் கருத்தரிப்பு தடுப்பு அறுவை சிகிச்சை எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 27ல் நடந்த விசாரணையின் போது, மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர, பிற மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.


* மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. நவம்பர் 3ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.


* இந்த வழக்கில் இன்று (நவ., 07) சுப்ரீம்கோர்ட் மேலும் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement