ஜனநாயகம், பொது மக்கள் மீது அக்கறை இல்லை: பாஜ மீது ராகுல் சாடல்

32

புதுடில்லி: ''ஜனநாயகம் மீதும், பொது மக்கள் மீதும் பாஜ அரசுக்கு அக்கறையில்லை,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. மேலும் இந்த நிலத்தை வெறும் 500 ரூபாய் முத்திரைத்தாளில் அவர் எழுதி வாங்கியிருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட 1800 கோடி ரூபாாய் மதிப்புள்ள நிலமானது, அமைச்சரின் மகன் நிறுவனத்துக்கு வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்துடன், முத்திரை கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் திருட்டு மட்டும் நடக்கவில்லை. அதற்கு சட்ட முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.


ஓட்டுத் திருட்டு மூலம் அமைந்த அரசு நிலத்தை திருடியுள்ளது. எவ்வளவு திருடினாலும் ஓட்டுகளை திருடி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அவர்களுக்கு தெரியும். ஜனநாயகம் மீதும், பொது மக்கள் மீதும், தலித்களின் உரிமைகள் மீதும் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. பிரதமரின் மவுனம் நிறைய பேசுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

கோடீஸ்வரர்களுக்கு சாதகம்



இதனிடையே பீஹார் சட்டசபை இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு பஹல்பூரில் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் கமிஷன் இணைந்து ஹரியானா சட்டசபை தேர்தலை கடத்திவிட்டனர். தற்போது பீஹார் தேர்தலையும் கடத்த முயற்சி செய்கின்றனர். பீஹாரில் காங்கிரஸ் மற்றும் மகாகத்பந்தன் கூட்டணியின் லட்சக்கணக்கான ஓட்டுக்கள் நீக்கப்பட்டு புதிதாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.


ஹரியானாவில், அதானி மற்றும் அம்பானிக்கு உதவுவதற்காகவும், கோடீஸ்வரர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்காகவும் , மக்களின் நிலங்களை அவர்களுக்கு வழங்கவும், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை தனியார் மயமாக்கவும் தேர்தல் முடிவை திருடியுள்ளனர். மஹாராஷ்டிராவின் தாராவியில் மட்டும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கார்ப்பரேட்களின் கடன் தொகையை பாஜ அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், அத்தகைய பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement