ஏ.ஐ., ஒழுங்குபடுத்த 2 குழுக்கள்

புதுடில்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்த ஒரு நிர்வாக குழு மற்றும் ஒரு அறநெறி கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

நாடெங்கும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, அரசு சார்பில், அதனை ஒழுங்குபடுத்த செயற்கை நுண்ணறிவு நிர்வாகக்குழு உருவாக்கப்பட உள்ளது.

மேலும், தொழில்நுட்ப கொள்கை மற்றும் அறநெறிகள் கமிட்டி ஒன்றும் அடுத்த மாதம் உருவாக்கப் பட உள்ளது.

உறுதி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வந்து வரைமுறைபடுத்துவது, பாதுகாப்பு, புதுமைகளை உறுதி செய்வது ஆகியவை இதன் நோக்கம் ஆகும்.

இதற்கான நிர்வாக குழுவில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், உள்துறை, வெளியுறவு துறை, தகவல் தொடர்புத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களை சேர்ந்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, செபி, இந்திய போட்டி ஆணையம், டிராய், ஐ.சி.எம்.ஆர்., நிடி ஆயோக், யு.ஜி.சி., ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இதன்மூலம் நிதி, சுகாதாரம், கல்வி, புத்தாக்கம் தொடர்பான துறைகளின் பங்களிப்பும் இக்குழுவில் இருப்பது உறுதி செய்யப்படும்.

வரவேற்பு அதேபோல், தொழில்நுட்ப கொள்கை மற்றும் அறநெறிகள் கமிட்டியானது, நிர்வாக குழுவுக்கு தேவையான வியூகங்களை வழங்குவதுடன் ஏ.ஐ., தொழில்நுட்பம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும்.

மேலும், தொழில் நுட்ப ரீதியிலும் அறநெறிகளின்படியும் பொறுப்பான செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இயங்குகிறதா என்பதையும் கண்காணிக்கும்.

அந்த வகையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விரைவில் மேற்கண்ட கமிட்டி உறுப்பினர்களைத் தேர்வு செய்து அறிவிக்க உள்ளது.

அரசின் இம்முயற்சிக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைப்பான நாஸ்காம் வரவேற்பு தெரிவித்திருக்கிறது.

நிர்வாக குழு உறுப்பினர்கள்



 மின்னணு, ஐ.டி., அமைச்சகம்


 உள்துறை


 வெளியுறவு துறை


 தகவல் தொடர்பு துறை


 அறிவியல் துறை


 ரிசர்வ் வங்கி


 செபி


 இந்திய போட்டி ஆணையம்


 டிராய்


 ஐ.சி.எம்.ஆர்.,


 நிடி ஆயோக்


 யு.ஜி.சி.,

Advertisement