சட்ட விரோதமாக தங்கிய ஆப்பிரிக்க ஆசாமி கைது

அவிநாசி: அவிநாசி அருகே முறையான ஆவணமின்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த மேற்கு ஆப்பிரிகாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி, கணேசபுரம் வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் படி நேற்று முன்தினம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர்.

அதில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

நேற்று மீண்டும் அப்பகுதியில் சோதனை நடத்திய அவிநாசி போலீசார், மேற்கு ஆப்பிரிக்காவில், கம்பியா டவுன் பகுதியைச் சேர்ந்த ஜோசப் கார்போ 53, என்பவரிடம் விசாரணை செய்தனர்.

அதில் பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிவடைந்த பின்பும் பல மாதங்களாக தங்கி இருந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, கார்போவை கைது செய்த அவிநாசி போலீசார், ஜே.எம்.மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அனுப்பினர்.

Advertisement