ராம்நகர் சபர்பன் பள்ளியில் சந்தித்து மகிழ்ந்த 'சூப்பர் சீனியர்கள்'

கோவை: கோவை ராம்நகரில் உள்ள சபர்பன் மேல் நிலைப்பள்ளியில், 1960 முதல் 1970ம் ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு, நேற்று நடைபெற்றது.

'சூப்பர் சீனியர் ஆப் சபர்பன் ஹை ஸ்கூல்; தி கோல்டன் டிக்கெட்ஸ்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில், 180க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில், 80 வயதை கடந்த 40 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

'கோல்டன் டிக்கெட்ஸ்' பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நண்பர்கள், தங்கள் பள்ளி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதோடு, தாங்கள் படித்த காலத்தையும், தங்கள் பிள்ளைகள் படித்த காலத்தையும் ஒப்பிட்டு, தற்போது தங்கள் பேரக் குழந்தைகள் பயிலும் கல்வி முறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த மகிழ்ச்சியில், நண்பர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, குழுவாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சிலர் தங்கள் பழைய நினைவுகளை பாடல்களாக பாடி அசத்தினர். அனைவருக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், '92 வயதுடைய முன்னாள் மாணவர் ஒருவர், பெங்களூருவில் இருந்து தனது மகனுடன் விமானம் மூலம் வந்து கலந்துகொண்டது ஆச்சரியமாக இருந்தது' என்றனர்.

பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ராமசந்திரன், ''இதுபோன்ற முன்னாள் மாணவர் சந்திப்புகள், மீண்டும் நமது பள்ளி நாட்களை மலரச் செய்வதோடு, நமக்குள் ஒருவித பாசிட்டிவ் உணர்வுகளையும் அதிகரிக்கச் செய்கிறது,'' என்றார்.

பள்ளி தாளாளர் நாகசுப்ரமணியம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கிருஷ்ண சங்கர், ராதா கிருஷ்ணன், ஸ்ரீராம், ராமகிருஷ்ணன், முரளி, மாரியப்பன் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

Advertisement