இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்

9


புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பங்கேற்ற, பேரணி, பிரசாரம் மற்றும் தேர்தல் கூட்டங்களில் முதல்வர் நிதீஷ்குமார் பங்கேற்காதது குறித்து பாஜ விளக்கமளித்துள்ளது.



பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் நவ.,6 ல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை ( நவ.,11) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் முன்னிட்டு பீஹார் மாநிலத்தில் பல இடங்களில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் தனித்தனியே பிரசாரம் செய்தனர். இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நிதீஷ்குமாருக்கு மீண்டும் முதல்வர் பதவியை பாஜ வழங்காது எனக் குற்றம்சாட்டின.



இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: தேர்தலுக்கு முன்னர், பீஹார் அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதீஷ்குமார் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றார். சமஸ்திபூரில் கடந்த 24 ம் தேதி நடந்த பிரசார கூட்டத்திலும் பிரதமர் மோடி, நிதீஷ்குமார், சிராக் பஸ்வான், உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் ஒன்றாக மேடை ஏறினர். அனைவரும் தனித்தனியே பிரசாரத்தை நடத்துவது என நாங்கள் முடிவு செய்தோம். அது தான் எங்களின் திட்டம்.

முதல்வர் வேட்பாளர்



முதல்வர் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி தெளிவாக கூறிவிட்டார். முதல்வர் பதவி காலியாக இல்லை என ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி இருக்கும் போது தற்போதைய முதல்வர் பெயரை கூற வேண்டும். முதல்வர் வேட்பாளர் நிதீஷ்குமார் தான். இதில் என்ன குழப்பம் உள்ளது. எங்களிடம் எந்த பிரச்னையும் இல்லை. எங்களின் முதல்வர் வேட்பாளர் நிதீஷ்குமார் தான். இவ்வாறு அவர் கூறினார்.

ராகுலுக்கு தெரியாது



மேலும் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்து குறித்து தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ராகுல் பிறக்கும்போதே தங்கக் கரண்டியுடன் செல்வாக்காக( Born with golden Spoon) பிறந்தவர். நாட்டை பற்றி அவருக்கு தெரியாது. மாணவர்கள் போராட்டத்தை நெரித்தவர்கள் தற்போது அவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர். அவர்களின் உரிமை என்ன? தேர்தலை சந்திக்கும் அவர்கள் தோல்வியையே தழுவுகின்றனர்.


எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசியலமைப்பு நகலை கிழித்தது ஏன்? அரசியலமைப்பு, தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் மற்றும் பாதுகாப்பு படையினரை விமர்சிக்க அவருக்கு உரிமை உள்ளதா?. தேர்தல் கமிஷன் அரசியல்சாசன அமைப்பு. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு தீவிரப்பணி இதற்கு முன்னரும் நடந்துள்ளது.

முன்னாள் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் நீதிமன்றம் கூறியது ராகுலுக்கு மறந்துவிட்டதா? ராகுல் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். தான் சொல்வது நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஆனால், அவரது ஆணவத்தை இளைஞர்கள் உடைக்கின்றனர். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.

Advertisement