ஐ.ஏ.எஸ்.,கள் மீது வழக்கு தொடர 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்? போலீசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை : 'முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான, 'டெண்டர்' முறைகேடு வழக்கில், இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது வழக்கு தொடர, மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்து கொண்டது ஏன்' என, லஞ்ச ஒழிப்பு போலீசார் விளக்கம் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகள் மேற்கொள்ள, உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி, அரசிடம் அறிக்கை அளித்தது. அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், 'மத்திய அரசு கோரிக்கையின்படி, வழக்கு சம்பந்தமான, 12,000 பக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, நவ., 7ல் அனுப்பப்பட்டுள்ளது. அதை மத்திய பணியாளர் நலத் துறை பெற்றுள்ளது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது: முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர, 2024ம் ஆண்டு பிப்., மாதம் அனுமதி பெற்ற நிலையில், இரு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?இந்த கால தாமதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அடுத்து தேர்தல் நெருங்கி விட்டது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பது பொது மக்கள் விருப்பமாக உள்ளது. அதனால், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர்.


இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக, வழக்கு தொடர அனுமதி கேட்க இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது ஏன் என்பதற்கு விளக்கமளித்து, லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும், 24க்கு தள்ளிவைத்தார்.

Advertisement